Thursday, August 8, 2013

வணக்கம் கூறுகிறேன்

என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே,
வணக்கம். வலைப்பதிவு தொடங்க வேண்டுமென்பது எனது நீண்ட காலக் கனவு. என் இதயத்தில் ஓயாது அலையெழுப்பிக் கொண்டிருக்கும் எண்ண அலையோசைகளுக்கு வடிவம் கொடுத்து அவற்றை  என்னின உலகத் தமிழர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற தணியா வேட்கை தனல்விட்டு எரிந்துகொண்டிருந்தது எந்நேரமும்.
வலைப்பதிவு தொடங்க வேண்டும் என்ற ஆவல் இதயம் முழுவதும் நிரம்பி வழிந்ததே ஒழிய, அதனைச் செயல்படுத்தத் தேவையான தகவல் தொழில்நுட்பத் திறன்களை நான் பெற்றேனில்லை. இந்தக் குறைமனப்பான்மையிலேயே காலம் கரைந்துவிட்டது.
2009 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை சார்பாகத் தஞ்சைப் பல்கலைக் கழகம் ஆண்டுதோறும் சிறந்த தமிழிலக்கியப் படைப்பிற்குக் கரிகாலன் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டிற்கான, அந்தப் பெருமதிப்புக்குரிய இலக்கியப் பரிசாம் கரிகாலன் விருது பெற்ற சிங்கை எழுத்தாளர் அன்புச் சகோதரி திருமதி கமலாதேவி அரவிந்தன் அவர்கள் எந்நேரமும் என்னை வற்புறுத்தியதன் காரணமாகவும்  நண்பர் ஒருவர் உதவி செய்ய முன்வந்ததாலும் எனது இந்த சுந்தரவனம் வலைப்பதிவு இணைய உலகத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.அவ்விருவருக்கும் யான் என்றென்றும் நன்றியுடையேன்.
தமிழ் எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், இளையர்கள், சமூகத்தலைவர்கள் முதலியோர் தம் படைப்புகளை அனுப்பி எனது கன்னி முயற்சிக்கு ஆதரவு தர வேண்டுமாய் அன்போடு வேண்டிக் கொள்கிறேன். தமிழ்மொழி, இலக்கியம், தன்னார்வம் போன்ற துறைகளை ஒட்டிய படைப்புகளை மட்டுமே அனுப்பி வைக்குமாறு அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.
இளையர்கள் முனைப்போடு படைப்புக்களை அனுப்ப வேண்டுவது அவசியம். அவர்களின் படைப்புக்களை உலகத் தமிழர்கள் படிக்கவும் அது பற்றிய எண்ணங்களை அவர்கள் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால், படைப்பாளர்கள் தம் படைப்புக்களை மெருகேற்றிக் கொள்ள இது ஓர் அரிய தளமாக அமையும். அதனால், இளையர்கள் தயங்காது எழுத வேண்டும்.
சுந்தரவனம் பூத்துக் குலுங்க உரமாய் இருப்பீர் உலகத் தமிழர்களே! 
அன்புடன்,
                        பொன் சுந்தரராசு
                                                 மின்னஞ்சல்: ponsun08@gmail.com

சீர்மிகு சிங்கப்பூரின் நாற்பத்தெட்டாவது நாட்டு நாள் விழா




உலகத்தில் பரவலான நிலப்பரப்பைத் தனதாக்கிக் கொண்டுள்ள பெரிய நாடுகள் பல. சிறிய நிலப்பரப்பையுடைய நாடுகள் பலப்பல. அத்தகைய நாடுகளுக்கிடையில் உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாய் மையம் கொண்டிருக்கும் நாடு சிங்கப்பூர். உருப்பெருக்கிக் கண்ணாடி இருந்தால்தான் உருப்படியாகப் பார்க்க முடியும் என்று ஏளனமாய் எண்ணியோரும் இருந்தனர். அந்தச் சின்னஞ்சிறு நாடு நாற்பத்தெட்டாவது நாட்டு நாளைக்  கொண்டாடுகிறது உலகம் வியக்கும் வண்ணம்! இது விந்தையிலும் விந்தையென வியப்படைவோரும் இருக்கலாம்.
வாழ்வதற்கு வளமான நிலமில்லை. உண்ணும் உணவிற்கு விளைவில்லை. அவ்வளவு ஏன்? குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லை. இத்தகைய வேதனையான நிலையில்தான் சிங்கப்பூர் விடுதலை பெற்றது. உயிர் வாழ்வது எப்படி என்று மலைத்து நின்றனர் மக்கள். இது 1965ஆம் ஆண்டின் சூழல். அன்றைய நிலை அது.
இன்றைய நிலை என்ன?
வீறு கொண்ட வேங்கையாய், சீறிப்பாய்ந்த சிங்கமாய் விண்ணைமுட்டும் வெற்றிகளைக் குவித்து அகிலமே வியக்கும் வண்ணம் உலகத்தில் அழகொளி வீசிக்கொண்டிருக்கிறது சிங்கப்பூர்! நிதி நிலையில் உயர்ச்சி! மதி நிலையில் வளர்ச்சி! மக்கள் வாழ்க்கையில் மலர்ச்சி! வளர்ந்த நாடுகளின் பட்டியலுக்கு இடப்பெயர்ச்சி! அடேயப்பா, நம்ப முடியவில்லையே என்று வியக்கின்றனர் நான்கு திக்குகளிலும் வாழும் மக்கள். இந்த அற்புதங்கள் எல்லாம் எப்படி நிகழ்ந்தன?
மாயத்தால் மாற்றங்கள் ஏற்படவில்லை! மந்திரத்தால் பலன் கிட்டவில்லை! யாகத்தால் வளம் கொட்டவில்லை. மானுட ஆற்றலால் நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்குள் சிங்கப்பூர் ஒரு செல்வபுரியாக மாறி வரலாற்றைப் புரட்டிப் போட்டது. அறிவுடையார் எல்லாம் உடையார் என்ற குறள்நெறி மெய்ப்பிக்கப்பட்டது சிங்கப்பூரில்! அறிவும் ஆற்றலும் இறையாண்மையும் கொண்ட அரசியல் தலைவர்களின் வழிகாட்டுதலும் திறனும் புலமையும் உழைப்பும் கொண்ட மக்களின் பங்களிப்பும் சிங்கப்பூரை இமாலய வெற்றி பெறச் செய்து வெற்றிப் படிகளின் உச்சியில் கொண்டுபோய் நிறுத்தியது.
லீ குவான் இயூ என்ற அரசியல் தலைவரின் சட்டத்துறை மூளையில் உதித்த தொலையோக்குத் திட்டங்களின் வெற்றியால், 1959இல் மக்கள் செயல் கட்சி சிங்கப்பூரில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. மக்கள் செயல் கட்சியின் அன்றைய தலைமைச் செயலாளர் திரு லீ குவான் இயூ. தலைவர் திரு.டோ சின் சை. திரு.லீ குவான் இயூ பிரதமரானார். திரு டோ சின் சை சுகாதார அமைச்சுப் பொறுப்பையேற்றார். அவர்களுக்குத் துணையாக அறிவுத்திறனும் செயல்திறனும் மிகுந்த அமைச்சர் பெருமக்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தோள்கொடுத்து நின்றனர்.

     தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாய்ச் 
     சொல்லலும் வல்லது அமைச்சு  (குறள் 634)    

என்ற வான்மறை வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்கப் பொறுப்பிலிருந்த அமைச்சர்கள் நாட்டுருவாக்கத்திற்கு உகந்த நல்ல திட்டங்களைத் தீட்டினர்; தீட்டிய திட்டங்களைச் செயல்படுத்தினர். அதன் பயனாக முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதியென முகிழ்த்தது நவீன சிங்கப்பூர்.
 சிங்கப்பூரின் தொழிற்சங்கத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், நாட்டு நலனுக்கு முன்னுரிமை கொடுத்த பொதுமக்கள் ஆகியோரின் தியாகமும் அர்ப்பணிப்பும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்தன.  
இந்த நவீனச் சிங்கப்பூர் உருவாகப் பாடுபட்ட முதல் தலைமுறை அரசியல் நிபுணர்களுள் பலர் இன்று நம்மோடு இல்லை. அமரர்களாகிட்ட  மரியாதைக்குரிய டோ சின் சை, கோ கெங் சுவீ, எஸ். ராஜரத்தினம்,  இ. டபல்யூ பார்க்கர், ஓங் எங் குவான், ஓங் பாங் பூன், கே.ஏ பர்ன், அகமட் இபுராஹிம், அகமட் மாத்தார் போன்றோரின் உழைப்பையும் தொண்டினையும் மறக்க முடியுமா?
 
இன்றும் நம்மோடு வாழ்ந்து மதியுரைஞர் அமைச்சராக வழிகாட்டிக் கொண்டிருக்கும் தொண்ணூறு வயதடைந்த அரிய அரசியல் தலைவரும் நவீன சிங்கப்பூரின் தந்தையுமான திரு லீ குவான் இயூவும் ஏனைய முன்னோடித் தலைவர்களும் சிங்கப்பூரின் நாட்டுருவாக்கத்திற்காகச் செய்த தியாகத்தையும்  அர்ப்பணிப்பையும் சிங்கப்பூரர்கள் என்றும் நன்றியோடு நினைவில் கொள்ள வேண்டும். நாம் இன்று அனுபவிக்கும் சொகுசான வாழ்க்கைக்குரிய நாடாகச் சிங்கப்பூரை அமைத்துக் கொடுத்தவர்கள் அப்பெருமக்கள்தாம். அவர்கள்  போட்ட அரசியல் வீதியில்தான் அடுத்தத் தலைமுறைத் தலைவர்கள் பயணித்து அரசியல்பணி புரிந்தனர்;  பணி புரிகின்றனர்.
1990ஆம் ஆண்டு, திரு கோ சோக் தோங் பிரதமர் பொறுப்புக்கு வந்தபோது இரண்டாம் தலைமுறைத் தலைவர்கள் அவரோடிணைந்து பணியாற்றிச் சிங்கப்பூரின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றனர். அவர்களுள் டாக்டர் டோனி டான் (இந்நாள் அதிபர்), புரோபசர் எஸ் ஜெயகுமார், டாக்டர் டே எங் சுவான், திரு எஸ் தனபாலன், திரு. ஓங் டெங் சியோங், திரு லீ சியன் லூங் (இந்நாள் பிரதமர்), திரு சிடெக் சானிஃப் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
 இன்றைய பிரதமர் திரு லீ சியன் லூங் தலைமையிலான மூன்றாம் தலைமுறை அரசியல் தலைவர்கள் 2005ஆம் ஆண்டு முதல் ஆட்சிப் பொறுப்பேற்று இன்று வரை அருமையாக ஆட்சி செய்து வருகின்றனர். 21ஆம் நூற்றாண்டின் தேவைகளை நிறைவேற்றும் விதமாகவும்  மின்னிலக்க யுகத்தில் வாழும் சிங்கப்பூரர்களின் வேணவாவிற்கு ஏற்றபடியும் பொறுப்பிலிருக்கும் அமைச்சர்கள் பணிபுரிந்து வருகின்றனர். செயல்திறமிக்க திருவாளர்கள் தியோ சீ ஹியன்,  தர்மன் சண்முகரத்தினம், க.சண்முகம், காவ் பூன் வாங், யாக்கூப் இபுராஹிம், விவியன் பாலகிருஷ்ணன் போன்றோர் நாட்டை வழிநடத்தி வருகின்றனர். நம் நாட்டு அரசியல் தலைவர்களின் அரிய பணியினால் கல்வி, பொருளியல், தொழில்துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் சிங்கப்பூர் வளர்ச்சி பெற்றுத் திகழ்கிறது.சிங்கப்பூர் வளம் பெற்றிருக்கிறது!
சிங்கப்பூரர்கள் நலம் பெற்றிருக்கின்றனர்! இந்த ஏற்றமிகு வாழ்வை நமக்கு ஏற்படுத்தித் தந்த அரசியல் தலைவர்களுக்குச் சிரந்தாழ்த்தி நன்றி சொல்வோம்.
நம் தாய் நாடாம் சிங்கப்பூருக்குத் இதயம் நிறைந்த தேசிய தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
வாழ்க, சிங்கப்பூர்!

பல கதைகள்! ஒரு சிங்கப்பூர்!
தொடரட்டும் சிங்கைத் திருநாட்டின் வெற்றிகள்!!
முற்றும்

Tuesday, August 6, 2013

வரையாது வழங்கும் வள்ளல் ஜலீலுக்கு ஜாஸா பக்தி விருது


வானத்திலிருந்து பொழிந்து இவ்வையகத்தைச் செழிக்க வைக்கிறது  மழை. அதனைத்தான் இந்தப் பரந்து விரிந்த அண்டத்தின் ஈடியிணையற்ற வள்ளலாகக் கொள்ள வேண்டும். அதனால்தான் உலகப் பொதுமறையாம் திருக்குறளை அதிகார வகைப்படுத்தியோர் வான்சிறப்பைக் கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வைத்துப் பெருமைபடுத்தினர்.
       வான்நின்று உலகம் வழங்கி வருதலால்                                
                  தான் அமிழ்தம் என்றுணரப் பாற்று   என்றும்
                 தானம் தவம்இரண்டும் தங்கா வியன் உலகம்
        வானம் வழங்கா தெனின்
என்றும் இன்னும் பலவாறும் திருவள்ளுவர் பெருமான் வான்சிறப்பினைப் போற்றிப் புகழ்கிறார்.
மழையினைப்போல் பலன் கருதாது இவ்வலகில் ஒடுங்கியும் முடங்கியும் வசதியற்று வாழும்  மக்களுக்குத் தம் உடலைக் கொடுத்தும் உறுபொருளை வழங்கியும் உய்வித்து வருவோர் பலர் இருக்கிறார்கள். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று உருகிய இராமலிங்கனாரின் கருணையுள்ளத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் அவர்கள். நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்ற உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டோர் அவர்கள்.
   அத்தகைய ஈரநெஞ்சம் படைத்தவர்கள் பாராட்டப்பட்டுச் சிறப்பிக்கப்படுவது சிங்கையில் சிறந்த வழக்கமாக இருந்து வருகிறது.
பிறர்மேல் அன்பும் அவர் நலனில் அக்றையும்கொண்ட அருளுள்ளம் கொண்டோர் ஐவர் அண்மையில் சிறப்பிக்கப்பட்டனர்.

கடந்த ஜூன் திங்கள் 22ஆம் நாள், பிற்பகல் 2.00 மணியளவில் இண்டர் கொண்டினண்டல் ஹோட்டலில் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம்  ஜாஸா பக்தி விருது 2013 (Jasa Bakti Award 2013)  வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. அந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் அதிபர் மாண்புமிகு டோனி டான் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதளித்துச் சிறப்பித்தார்கள். அம்மன்றம் ஆண்டுதோறும் நடத்தும் நிகழ்ச்சியாகும் அது.
சிங்கப்பூரில் வாழும் முஸ்லீம் சிங்கப்பூரர்களுள் சமூகச் சேவையாற்றுவதில்  தனித்தன்மையுடன் சிறந்து விளங்குவோருக்கு ஜாஸா பக்தி விருதுவழங்குதல் வழமையில் இருந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்படுவோர் கல்வி, கலை, சமூகப் பணிகள் போன்ற துறைகளில் சேவை புரிந்திருக்க வேண்டும். அதே வேளையில் பள்ளிவாசல், இஸ்லாமிய சமூக அமைப்புக்கள் போன்றவற்றுக்குக் குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்குத் தொண்டு புரிந்திருக்க வேண்டும். அத்தகையோரே விருதுக்குத் தகுதி பெறுவர்.
இவ்வாண்டு ஜாஸா பக்தி விருது பக்தி விருது பெற்ற ஐவருள் நமது நெஞ்சுக்கு மிகவும் நெருங்கியவர் ஜலீல் என்று நம் அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் ஹாஜி எஸ் எம் அப்துல் ஜலீல் (Haji S M Abdul Jaleel) அவர்களாகும். ஜலீல் அவர்கள் மெச்சத் தகுந்த அந்தச் சிறப்பு விருதைச் சிங்கையதிபர் டாக்டர் டோனி டானிடமிருந்து பெற்றுக் கொண்டார். அது அவருக்கு மட்டுமன்று சிங்கப்பூர்த் தமிழர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைந்தது எனில், அது மிகையன்று.
விருதுக்குரியோருக்கான வரையரைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் துறைகளிலும் ஜலீல் அவர்கள்  மேம்பட்ட சேவை புரிந்துள்ளார். அந்த வரையறைகளுள் அவர் தமிழ் இலக்கியத் துறைக்கு ஆற்றியுள்ள பணிகள் அளப்பரியன என்பது எனது கருத்தாகும்.
சிங்கப்பூரில் தமிழ் எழுத்தாளர் ஒருவர், நூல் வெளியிட நிதி தேவைப்படுகிறது என்று உதவி நாடி நின்றால், அன்றலர்ந்த தாமரைபோல் முறுவல் மாறாத முகத்துடன் முன்வந்து உதவி புரிபவர் ஜலீல். பணம் பலரிடம் இருக்கலாம். அதைப் பிறருக்குக் கொடுக்கும் மனம் இருக்க வேண்டும். இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார் என்று இரக்கக் குணமற்ற செல்வந்தர்களை எண்ணி மனம் குமுறுகிறார் அண்மையில் நம்மைவிட்டு மறைந்த கவிஞர் வாலி. அவர் வருத்தத்துக்கு மாறான குணம் கொண்டவர் ஜலீல். நிதியுதவி நாடிச் சென்றவர்க்கு அவர் இல்லை என்ற சொன்னதாகத் தகவல் இல்லை. அதனால்தான் அவர் சிங்கைச் சீதக்காதிஎன்று சிறப்பிக்கப்படுகிறார்.
இது எப்படி இயலுகிறது என்று அவரிடம் ஒரு முறை கேட்டபோது, நான் வரும்போது எதுவும் கொண்டு வரவில்லை. போகும்போதும் எதுவும் உடன் எடுத்துப் போகப் போவதில்லை. இறைவன் கொடுத்த நற்பேறு நான் பெற்றிருக்கும் செல்வம். அதனை மற்றவர்களுக்குக் கொடுப்பதில் நான் பேரின்பம் அடைகிறேன்,” என்று சொன்னார். எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தைகள்!
உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் சமயப் பெரியார்கள் எல்லாரும் கூறும் மந்திர மொழிகள் அவை. அதனைப் பின்பற்றும் மனிதராக அவர் விளங்குகிறார். அது எளிதான செயலன்று.
        மனிதன் என்பவன்   
        தெய்வமாகலாம்                               
        வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்
        வாழைபோலத் தன்னைத் தந்து தியாகியாகலாம்
        உருகி ஓடும் மெழுகைப் போல ஒளியை வீசலாம்
என்ற கவியரசு கண்ணதாசனின் வைரவரிகளுக்கு எனக்குத் தெரிந்த எடுத்துக் காட்டு ஜலீல்தான்.
அவர் இன்னும் பல விருதுகள் பெற்று இன்புற்றிருக்க தமிழ்ச் சமூகத்தின் வாழ்த்துக்கள் உரித்தாகுக!


 பொன் சுந்தரராசு

Friday, August 2, 2013

கடல்நீர் இனிக்கிறது!





கடல்நீர் இனிக்கிறது!
-   பா. கேசவன்





இளங்கோ மற்றும் மாறன் பள்ளிக்குப் போகிறார்கள்.
வேலன் மற்றும் பாலன் நண்பர்கள்.
இராவணன் மற்றும் கும்பகர்ணன் சகோதரர்கள்.
மாதவி இசை மற்றும் நடனம் பயின்றாள்.
யானை மற்றும் குதிரை வந்தன.

இவற்றைக் கேட்டதும் என்ன எண்ணுகிறீர்கள்? ஏதோ ஒரு புதிய மொழிபோல் தோன்றுகிறதா? அல்லது வேடிக்கையாக இருக்கிறதா? சே! சே! இது என்ன தமிழா?” என்று செவியைப் பொத்திக்கொள்கிறீர்களா?
ஆம், தமிழ்ச் செவி இவற்றை ஏற்காது. தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்ற தமிழ் நெஞ்சம் இத்தகைய தொடர்களைக் கண்டு கொதித்தெழும். ஆனால், தமிழ் செய்த பாவமோ அல்லது தமிழன் செய்த பாவமோ இப்படிப்பட்ட தொடர்களைக் கேட்டும் படித்தும் தொலைக்க வேண்டியிருக்கிறது. தமிழும் ஆங்கிலமும் கற்றுத் துறைபோகிய மேதாவிகளின் நற்பணியே இத்தகைய மொழிக் கொலைக்குக் காரணம். ஆங்கிலத்திலே இவர்கள் இப்படிப் பிழையாக எழுதுவரோ? எழுதமாட்டார்கள். பிழை நேரக் கூடாதே என்பதில் மிகமிகக் கவனமாக இருப்பார்கள்.
     ஆங்கில நினைவு தோன்றும்போது எழும் மொழி வனப்பு, தமிழ் நினைவு தோன்றும்போது ஏன் எழுவதில்லை? தமிழ்த்தாயை எவ்வாறாவது குலைக்கலாம்; ஆங்கிலத் தாயை ஓம்பினால் போதும் என்னும் எண்ணம் இந்நாட்டவர்க்கு உதித்திருக்கிறது போலும்! ஈன்ற தாய் பட்டினி! மற்றத் தாய்க்கு நல்லுணவு! என்னே காலத்தின் கோலம்!  (திரு. வி..)
ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழ்த் தென்றல் திரு. வி.. கூறியது இன்றும் பொருந்துவதைக் காணும்போது தமிழின் நிலையையும் தமிழரின் நிலையையும் என்னென்று உரைப்பது!
கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட தொடர்களைப் பிழை நீக்கி முறையாக அமைக்கும்போது அவை பின்வருமாறு அமையும்:
இளங்கோவும் மாறனும் பள்ளிக்குப் போகிறார்கள்.
வேலனும் பாலனும் நண்பர்கள்.
இராவணனும் கும்பகர்ணனும் சகோதரர்கள்.
மாதவி இசையும் நடனமும் பயின்றாள்.
யானையும் குதிரையும் வந்தன.
இப்படி அமைவதே தமிழ் மரபு; தமிழ் இலக்கண நெறி; தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே இருந்துவரும் வழக்கு.
இருக்கின்ற இடத்தைவிட்டு
இல்லாத இடந்தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே! அவர்
ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே!”
என்ற பாடல்தான், தமிழ் மரபுக்கு ஒவ்வாத தொடர்களை வலிந்து திணித்துத் தமிழுக்கு ஊறு விளைவிக்கும் மேதைகளை எண்ணும்போது நம் நினைவுக்கு வருகிறது. தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டவை போன்ற தொடர்களை நல்ல தமிழறிஞர் எழுத்துக்களில் எங்கும் காண முடியாது. அதாவது எண்ணும்மைக்குப் பதிலாக மற்றும் என்னும் சொல்லை வைப்பதைக் காண முடியாது. ‘எண்ணும்மைக்குப் பதிலாக மற்றும் என்னும் சொல்லைப் பயன்படுத்துவோர், ஆங்கிலத்தில் உள்ள ‘and’ என்னும் சொல்லுக்கு ஈடாக மற்றும் என்னும் சொல்லை வழங்குகிறோம் என்னும் விந்தையான விளக்கத்தையும் தருகிறார்கள். ஆங்கிலத்தில் ‘and’ என்னும் சொல் வரும் இடங்களில் எல்லாம் தமிழில் எப்படி இருக்கும் என்பதைக் கீழ்வரும் தொடர்களைத் தமிழாக்கம் செய்து பார்த்தாலே புரிந்துகொள்ளலாம்.
     Work hard and you will pass the examination;
     For hours and hours;
     Better and Better
     We knocked and knocked
இந்தத் தொடர்களைத் தமிழாக்கும்போது, ‘and’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாக மற்றும் என்னும் சொல்லை அமைத்தால், அது வியப்புக்குரியதாக மட்டுமன்று; பொருளும் விபரீதமாகிவிடும்.
     பறவைகள் பல விதம் அவை
     ஒவ்வொன்றும் ஒரு விதம்
என்பது போல, ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு விதம். அதாவது ஒவ்வொரு மொழியும் தனித்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு மொழிக்கும் தனிமரபு உண்டு. அந்தத் தனித்தன்மையும் மரபும் போற்றிக் காக்கப்படும்போதுதான் மொழியின் இனிமையும் செம்மையும் குலையாதிருக்கும்.
மாறன் மற்றும் இளங்கோ பள்ளிக்குப் போகிறார்கள் என்பது போன்ற வாக்கியங்கள் பிழையெனக் கண்டோம். வேறு சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், இரட்டிப்புப் பிழை செய்கிறார்கள். அவர்கள் மற்றும்’, ஆகிய என்னும் இரு சொற்களையும் வாக்கியத்திலே அமைத்து,மாறன் மற்றும் இளங்கோ ஆகியோர் பள்ளிக்குப் போகிறார்கள் என்று எழுதுகின்றனர். தமிழ் இலக்கண மரபு அறிந்து எழுதினால் இத்தகைய பிழைகள் நேருமா? பாமரர் பேச்சில்கூட இத்தகைய பிழைகளைக் காணமுடியாதே! அவர்களுக்குத் தெரிந்த தமிழ்மொழி மரபு, படித்தவர்களுக்குத் தெரியாமற்போனது வியப்புக்குரியதன்றோ? நல்ல தமிழறிஞர்கள் நூல்களைப் படித்தால் தமிழ் மரபு தெரியும். இத்தகைய பிழைகளும் ஒழியும். அறிஞர் அண்ணாவின் கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். மரபு வழுவாத் தமிழுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு இது:
பேராசிரியர் சேது(ப்பிள்ளை) அவர்கள், தமிழின் ஒலி மாட்சி குறித்து அழகுறப் பேசியிருக்கிறார். தமிழ்மொழிக்கே அணியாக விளங்கிடும் கரம் கரம் குறித்து எடுத்துக்கூறி. அளிக்கும் ஒலியின் இனிமையை எடுத்தியம்பி, இத்தகைய ஒலி மாட்சியை, பிறமொழிகள் பெற்றிராத ஒலிமாட்சியை, நந்தம் மக்கள், உணர்ந்து உவகை கொள்ளாதிருத்தல் குறித்தும், அதன் உயர்வறியாது அதனைப் பாழ்படுத்திடும் போக்கினைக் கண்டித்தும் பேசியுள்ளார்.
எழுந்திரு ஏந்திரு என்றாகிவிட்டதையும்,
திருவிழா திருவிஷா என்று கெடுவதையும்,
பழம் பளம் ஆகிப் பாழ்படுவதையும்,
கிழவி, கியவி ஆகி கரம் கேலியாக்கப்படுவதையும், எடுத்துக்காட்டி, நமது தாய்மொழிக்கே அழகளிக்கும் கரம் இங்ஙனம் பாழ்படுத்தப்படுகிறதே, கொச்சை பேசி மொழியினைக் கொலை செய்கிறார்களே என்று கூறிக் கசிந்துருகி நிற்கிறார்.
கரம் மற்றோர் அணி! இதனையும் பாழ்படுத்துகின்றனர் உரையாடலில்!
கரம், வன்மையான உணர்ச்சியைக் காட்டிடும் ஒலிக்குறி! இதனை உணராமல், வை படாதபாடுபடுத்துகிறார்களே நம்மனோர். காற்று, காத்தாகி விடுகிறது! நாற்று, நாத்தாகிறது! ஐயகோ! அம்மவோ! சிலம்பளித்த செல்வர்,
அறிவு அறைபோகிய பொறி அறுநெஞ்சத்து
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே!
என்று கண்ணகி கூறுவதாகச் செப்புகிறாரே, ஆறு கரம் ஒலிக்கிறது கேண்மின் என்று எடுத்துக் காட்டுகிறார்.
மற்றும் பலகூறி, பேராசிரியர் மொழிவளம் பாழ்படுவது குறித்துக் கவலைப்படுகிறார்.
கரம் கரம் பாழ்படுகிறது!
தமிழ்மொழிக்கே தனிச்சிறப்பளிக்கும் அழகணி! இதனை அறியாதிருக்கும் தமிழர் தமிழழிப்போராகின்றனர்.
அவர்தம் போக்குக் கண்டு, மொழியின் சுவையினைப் பருகிடும் பேராசிரியர், கொதித்தெழுவதும், ஆகுமோ இந்தப் போக்கு எனக் கடாவுவதும் கரத்தின் அருமையினைக் கூறுவேன் கேண்மின், என்று அறைவதும் முறையே குறை கூறுகின்றேனில்லை! அவர் ஆறு கரம் ஒலித்திடும் சிலப்பதிகார அடிகளை நினைவுபடுத்தும்போது, உண்மையிலேயே, அந்த கரங்கள், தமிழ்மொழியின் ஒலிமாட்சியையும், பத்தினிப் பெண்ணின் உள்ளத்தை ஆட்சி செய்த வீர உணர்ச்சியையும் ஒருசேர எடுத்துக்காட்டத்தான் காண்கிறோம். மறுப்பாரில்லை! அத்தகைய மாண்புமிகு மொழிக்கு நாம் உடையோம் என்றெண்ணிப் பெருமிதம் கொள்ளாமலில்லை!
மங்கை நல்லாளிடம் காணும் ஒயிலும், மயிலிடம் காணும் சாயலும், மொழியிடம் காணப்பெறும் ஒலி அழகுக்கு ஈடாகாதுதான்! அந்த ஒலி அழகு, கொச்சை பேசுவதால், செத்தொழிகிறது என்பது கண்டு கண்ணீர் வடித்திடத் தக்கதோர் நிலைதான் ஐயமில்லை! ஆனால்,!
ஒளியும் மல்கி மறைந்துகொண்டிருக்கிறது!
ஒலிகெட்டும் ஒளிமங்கியும் இருத்தல் மட்டுமல்ல, மொழியே கீழ்நிலைக்கு, தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கிடக்கிறது.
பாவலரும் காவலரும் போற்றி வளர்த்த மொழி, அரச அவையிலும் ஆடலரங்கிலும், புலவர் மன்றத்திலும் பூங்காவிலும், கடலின் மீதும், குன்றின் மீதும் களிறு ஏறுவோனும், காற்றை அடக்குவோனும், எங்கும் எவரும் பேசி மகிழ்ந்த மொழி, இன்று, எல்லாத் துறைகளிலும், பேராசிரியர் பெருங்கவலை கொள்வது போல, ஒலிமாட்சி இழந்து மட்டுமல்ல, நிலை இழந்து நிற்கிறதே! கேட்பார் யார்? எங்குளர்? மொழியின் வளம் பேசி மகிழ்வோர் உளர்! ஒலி அழகுகாட்டி உவகை ஊட்டுவோர் உளர்! மொழியின் நிலை? அந்நிலைக்கு வந்துள்ள கேடு, அக்கோட்டினை மூட்டிடும் கெடுமதி கொண்டோர்! அவர்தம் அடிதொட்டு ஏற்றம் பெற எண்ணும் முதுகெலும்பற்றோர்! இவை குறித்து எடுத்தியம்ப யார் உளர்?” (அறிஞர் அண்ணா).
இந்தக் கட்டுரையிலே எத்தனையோ இடங்களில் எண்ணும்மை வந்திருக்கிறது. எங்கேனும், ஓரிடத்திடத்திலாவது எண்ணும்மைக்குப் பதிலாக மற்றும் என்னும் சொல்லை அண்ணா பயன்படுத்தியிருக்கிறாரா? இல்லையே! ஏன்? அவர் தமிழறிந்தவர்; தமிழ் மரபு அறிந்தவர்; அது மட்டுமன்று; ஆங்கிலமும் தமிழ்மொழியும் நன்கறிந்தவர். நம் மொழி மரபைக் கட்டிக் காத்துத் தமிழ்மொழியை வளர்க்க வேண்டும் என்பதிலே அளவற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, அண்ணாவின் எழுத்திலே, தமிழ் மரபு பொன்னெனப் போற்றிக் காக்கப்படுகிறது. நல்லதமிழ் எழுத நமக்கு உற்ற துணையாக அமைபவை தமிழ் மரபு உணர்ந்த இத்தகைய அறிஞர் பெருமக்களின் எழுத்துகளே!
சற்று முன்பு நாம் எடுத்துக் காட்டிய காட்டுரையின் இறுதுயிலே,இவை குறித்து எடுத்தியம்ப யார் உளார்?” என்று அண்ணா கேட்கிறார். இது 1955-இலே அறிஞர் அண்ணா எழுப்பிய கேள்வி. இன்றும் அதே கேள்வியைக் கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இது வெட்கத்திற்கும் வேதனைக்கும் உரிய நிலையல்லவா? இதைப் போக்கித் தமிழன்னைக்கு வலிவும் வனப்பும் ஊட்டி, அவள் தலை நிமிர்ந்து நிற்கச் செய்வது நம் கடமையன்றோ?
தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு போன்ற துறைகளில் பங்கம் விளைவித்து, அதன்வழி, தமிழை ஊனப்படுத்த நினைப்போர் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும், அவர்களின் மோசடிகளைக் கூர்மழுங்கச் செய்து, தமிழைக் காக்க நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொண்ட தமிழறிஞர்களும் தமிழாசிரியர்களும் முன்வர வேண்டும். அப்போதுதான் தமிழன் தன் தாய்மொழியின் சிறப்பை அறிந்து தலைநிமிர்ந்து நிற்க முடியும்.
நாம் எடுத்துக்காட்டிய கட்டுரையில் வேறோரிடத்தில் அறிஞர் அண்ணா குறிப்பிட்டிருக்கும் இன்னொரு செய்தி, இன்றைய தமிழனின் நிலைக்கும் அப்படியே பொருந்துகிறது.

படித்திருப்பாயே தம்பி, பம்பாயில் பத்து நாளைக்கு முன்பு, ஒரு புனித விழாவன்று கடல்நீர் இனிக்கிறது என்று ஒரு புரளி கட்டிவிடப்பட்டதாமே. அந்தச் செய்தியை, எவனோ ஓர் எத்தன், தனக்குக் கிடைத்த ஏமாளியிடம் கூறி  வைத்திருக்கிறான். கடல்நீர் இன்று மட்டும் இனிக்கும் என்று. அவ்வளவுதான். சாரை சாரையாக மக்கள் கடலை நோக்கிச் சென்று, நான் முந்தி நீ முந்தி என்று விழுந்தடித்துக்கொண்டு சென்று, கடல்நீர் பருகினராம்.
கடல்நீர் கரித்தது! முகம் சுளித்தது! குமட்டலும் வந்தது! எனினும் என் செய்வர்! கடல்நீர் இனிக்கும் என்றல்லவா கூறி இருக்கிறார்கள். எனவே, கடல்நீர் கரிக்கிறது, இனிக்கவில்லை என்று கூறினால், பாபாத்மாவுக்கு அப்படித்தான்! புண்யாத்துமாவுக்குத்தான் இனிக்கும் என்று கூறிவிடுவரே என்று எண்ணி, ஏதும் கூறாமலே இருந்துவிட்டனர் பெரும்பாலோர். துணிந்து சிலர் கூறினர், கடல்நீர் எப்போதும் போல கரிக்கத்தான் செய்கிறது; இனிக்கும் என்று சொன்னது வெறும் புரளி என்று! ஆம்! – என்றுகூடப் பக்தர்கள் கூறவில்லையாம் முகம் ஆம் என்றதாம்!” (தம்பிக்குக் கடிதம்)

கடல்நீர் இனிக்கிறது என்பதை மறுத்துக் கூற இயலாமல், பரிதவிக்கிறவர்கள் பலர். “கடல்நீர் இனிக்கவில்லை கரிக்கிறதுஎன்று துணிந்து கூறியவர்கள் சிலர். தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் இன்றும் அதே நிலைதான். நடுநிலை நின்று உண்மையைக் காணும் ஆற்றலும் உணர்ந்த உண்மையை எடுத்தியம்பும் துணிவும் நமக்கு வரவேண்டும். அத்தகைய துணிவுடையோர் சிலராக இருப்பதால் பயனில்லை; அவர்கள் பலராக வேண்டும்! அப்போதுதான தமிழின் நிலைஉயரும்! தமிழனின் நிலையும்உயரும்!




*இக்கட்டுரையாசிரியர் தாம் எழுதிய இனிய தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம் என்னும் நூலுக்காக, மொழிப்புலத்திற்குரிய தமிழக அரசின் முதல்பரிசு (2005), அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது (2006) ஆகியவற்றைப் பெற்றவர் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.