திரும்பிப்பார்ப்போம்
உலகில் வாழும் மனிதர்களுக்கு நாகரிகமும் பண்பாடும் இருகால்களாகும். இவ்விரு
சொற்களுமே மனிதன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெற்றுவந்துள்ள வளர்ச்சியினைச்
சுட்டுவனவாகும். இயற்கைப் படைப்பின் மணிமுடியாக விளங்குபவன் மனிதன். தனக்கே உரிய
சிறப்புப் பண்புகளாலேயே மனிதன் பிற விலங்குகளினின்றும் வேறுபடுகின்றான். அவனுடைய
மனமே அவ்வேறுபாட்டை உருவாக்குகின்றது. சமுதாய விலங்காகிய மனிதன் பிற மனிதர்களோடு
கலந்து வாழும்போது தன்னலத்தை ஒரளவு புறக்கணித்துப் பொதுநலத்தைப் பேண
வேண்டியவனாகிறான். இதற்குச் சில பண்புகள் தேவைப்படுகின்றன.
அன்பு, அருள், வாய்மை, தூய்மை, ஒப்புரவு, கண்ணோட்டம், ஈகை, நாணம் முதலிய பண்புகள் பிறரோடு கொள்ளும் நல்ல உறவினுக்கு
அடிப்படையானவைகளேயாம். இவ்வுறவு தன்னுடைய சிறு சமூக எல்லைக்கோட்டைக் கடந்து செல்கின்றது. இதுவே மனித குலத்தின் சிறப்புப்
பண்பாகும். மனிதனுடைய அறிவும் அனுபவமும் பண்புகளாக மட்டுமின்றிப் பருப்பொருளாகவும்
வெளிப்படுகின்றன. உணவு, உடை, உறையுள், சிற்பம், ஓவியம் போன்ற பிற பொருள்கள் வாயிலாகவும்
மனிதனின் வளர்ச்சி வெளிப்படுகின்றது. ஆகவே பண்பாடு அகப்பண்பாடு, புறப்பண்பாடு என்று இருவகை ஆகின்றது.
இவ்விரண்டையும் முறையே பின்பற்றி வரும் மனிதன் சிறந்த பண்பாளன் ஆகின்றான்.
பண்பாடு என்றால் என்ன?
பெரும்பாலும் சிறந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்ற உள்ளப்பாங்கின்
வெளிப்பாட்டையே பண்பாடு என்கிறோம். அந்த வெளிப்பாடு சுவையுணர்வாகவும், நடையுடை பாவனைகளாகவும் தோன்றும் வாழ்வின் பற்பல
போக்குகளையும் நிலைகளையும் குறிக்கும்.
உடலைப்பற்றிய நன்னிலை, மனத்தைப் பற்றிய
தூய்மைநிலை, பேச்சின் இனிமை
இவையெல்லாம் பண்பாட்டில் அடங்கும். மக்களின் வாழ்க்கை வரலாற்றில் அவர்கள் இயற்றிக்
கொண்ட கருவிகள், சமூகப்பழக்கம்,
வழக்கம், நம்பிக்கை, சமயம் முதலியவற்றைப் பண்பாடு என்ற சொல்லால்
குறிக்கின்றனர். மக்களின் அறிவு நலம், ஒழுக்க உயர்வு, கொள்கை நலம்,
பண்பு நலம், வாழ்க்கை நலம் ஆகியவை மென்மேலும் திருந்திய
நிலையே பண்பாடு எனப்படுகிறது என்றும் கூறலாம்.
ஓர் இனத்தின் பண்பாடு அதன் இலக்கியம், நடையுடை, மொழி, கலைகள், குறிக்கோள், சமயக்கொள்கை, அரசியல் வரலாறு, சமுதாயநிலை, பெண்களின் நிலை, அறிவியற்சிறப்பு, கல்வி நிலையங்கள் முதலியவை மூலம்
விளக்கமுறுகின்றது. சிலர் நாகரிகம், பண்பாடு இரண்டும் ஒன்றே என்பர். ஆனால் திரு.பாவாணர் அவர்கள், ``நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை, அது எல்லாப்பொருள்களையும் தமக்கும் பிறருக்கும்
பயன்படுத்துவது; உதாரணமாக
இலக்கணப் பிழையின்றிப் பேசுவதும், எல்லா வகையிலும்
துப்புறவாயிருப்பதும், காற்றோட்டமுள்ளதும்
உடல்நலத்திற்கேற்றதுமான வீட்டிற்குடியிருப்பதும், நன்றாய்ச் சமைத்து உண்பதும், பிறருக்குத் தீங்கு செய்யாமையும் நாகரிகக்
கூறுகளாகும்`` என்கிறார்.
மேலும், `எளியாரிடத்தும்
இனிதாகப்பேசுவதும், புதிதாய் வந்த
ஒழுக்கமுள்ள அயலாரை விருந்தோம்புவதும், இரப்போர்க்கிடுவதும், இயன்றவரை
பிறருக்கு உதவுவதும், கொள்கையும்
மானமுங்கெடின் உயிரை விடுவதும், பண்பாட்டுக்
கூறுகளாம். சுருங்கச் சொல்லின் உள்ளத்தின் செம்மை பண்பாடும், உள்ளத்திற்குப் புறம்பான உணவு, உடை, உறையுள் முதலியவற்றின் செம்மை நாகரிகமும் ஆகும்` என்கிறார் திரு. பாவாணர்.
``தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் ஆழமான, அகலமான உறவை என்றும் அகலாமல் பேணிப்
பாதுகாக்கும் ஒழுக்கம்தான் பண்பாடு`` என்கிறார் மறைந்த குன்றகுடி அடிகளார்.
பண்பாட்டை ஏன் பின்பற்ற வேண்டும் ?
ஒரு மனிதனின் வாழ்க்கை மரம் போன்றது. ஒரு மரத்தின் வேர்கள் தண்ணீரைத்
தேடிச்செல்லும். அத்தண்ணீரில் சத்துப்பொருள்கள் இருக்கும். அத்தண்ணீர் அவ்வேரின்
வழியாக மரத்தைச் சென்று அடைகின்றது. அந்த வேர்தான் பூமியில் ஆழமாகப் பாய்ந்து
மரத்தைத் தாங்கி நிற்கின்றது. இவ்வேர்கள் முறையாக இயங்க வில்லை என்றால் மரத்தின்
கதி அதோ கதி தான். அதுபோலத் தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும் பண்பாடுகள் என்னும் வேர்கள்
இல்லை என்றால் `அடியற்ற மரம்போல்`
அம்மனிதனைக் கொண்ட சமுதாயம்
வீழும். ஒருவன் தனது இனத்திற்குள்ள பண்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாவிட்டால்
அவன் ஆகாயத் தாமரைபோல் நிலையற்றவனாக ஆகிவிடுவான். தனது இனத்தின் பண்பாடுகளை ஒருவன்
பின்பற்றாமல், விலகிச் சென்றால்
அவன் சார்ந்த சமுதாயம் அவனை விசித்திரப் பிராணியாகப் பார்க்கும். ஆகவே, ஒவ்வொரு மனிதனும் நாகரிக மாற்றம் எப்படி
நடந்தாலும் தனது பண்பாட்டு நெறிமுறைகளைக் கைவிடாமல் பின்பற்ற வேண்டும்.
சங்க காலத்திலிருந்து நமது தமிழர்களின் முக்கிய அமைப்பாகச் சீர்பெற்று வளர்ந்து வந்துள்ளது நமது பண்பாடு.
அக்காலத்து மக்கள் பிழைப்பதற்கெனப் பாடுபட்டுச் செய்த முயற்சிகள் ஒன்றாகச் செய்து
வந்தால் நன்மைகள் அதிகரிக்கும் என்பதற்காகக் கூடி வாழத்தொடங்கினர். இதுவே சமுதாயம்
என்ற அமைப்பிற்குப் பாதை அமைத்துக் கொடுத்தது. சமுதாயத்தில் ஒற்றுமையாக வாழப் பல
நெறிமுறைகளை வளர்த்துக் கொண்டார்கள்; பழக்க வழக்கங்களைக் கையாண்டனர். இப்பழக்க வழக்கங்கள்தான் நாளடைவில் நமது
பண்பாடு மற்றும் கலாச்சாரங்களாக உருவெடுத்துள்ளன. அக்காலத்தில் இந்தப்
பண்பாட்டினைப் பின்பற்றுவதன் அவசியம் தென்பட்டது. மக்கள் தாங்கள் வாழும்
சூழ்நிலைக்கேற்ப ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து சமுதாயத்தின்மீது நம்பிக்கை
கொண்டு வாழ்ந்தார்கள். ஆனால், இன்றோ அதே
பண்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதின் அவசியம் என்ன? என்று நம்மில் பலர் கேள்விகள் கேட்கின்றனர்.
இக்கால சூழ்நிலைக்கு இப்பண்பாட்டு நெறிமுறைகள் தேவையற்றவை என்று சிலர் பிடிவாதமாக
வாதிடுகின்றனர். ஒரு மனிதனின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் பண்பாடு தூண்டுகோலாக உள்ளது என்பதை உலகம் இப்போது உணரத்
தொடங்கி விட்டது. ஆணிவேர் ஆட்டம் கண்டவுடன் சிலர் விழித்துக் கொண்டுள்ளனர்.
இக்கட்டுரை, விழித்துக்
கொண்டோருக்கு வழிகாட்டியாகவும், தூங்குவோருக்கு
அபாயச்சங்காகவும் அமைகின்றது.
பண்பாடு என்பது நம்மிடையே பிறப்பிலிருந்து வளர்க்கப்பட்ட, வளர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஒருவரிடம்
பண்பாடு உறைந்து கிடைப்பதன் விளைவால் அவர் வாழ்வில் சிறப்பாக மதிப்புப் பெற்று
வாழ்வார். நம் பண்பாட்டைப் பின்பற்றுவதால் நம்மிடையே கட்டுப்பாடும் மனநலமும்
வளர்ச்சியடைகின்றது. பண்பாட்டின் நெறிமுறைகளை முறையே கையாண்டு பின்பற்றி வருவதால்
ஒன்றின் முக்கியத்துவமும், கட்டுப்பாட்டுடன்
அதை நடத்துவதும் ஒருவருக்குத் தெரிவிக்கப்படுகிறது. காலங்காலமாக இப்பண்பாட்டினைப்
பின்பற்றும் அன்பர் ஒருவர்
சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வார். அத்துடன் இந்நெறிமுறைகளைத்
தங்களின் வாரிசுகளுக்கும் கற்றுக்கொடுப்பார். பெற்றோரிடம் கற்ற நற்பழக்க
வழக்கங்களைக் கொண்டு பிள்ளைகள் தங்களையே மேம்படுத்திக்கொள்வர்.
இது வெறும் வாய்ப்பேச்சு அல்ல. பண்பாட்டினைப் பின்பற்றுவதால் வரும் நல்ல
விளைவுகளை நாம் கண்ணால் காணலாம். ஆசிய நாடுகளாக இருக்கக் கூடிய இந்தியா, சீனா போன்ற நாடுகளில் வலுவான பண்பாட்டை இன்றும்
பின்பற்றி வருவதால் அந்நாடுகளில் நாகரிகம்
நிறைந்த மக்கள் மதிப்பும் மரியாதையும் பெற்று வாழ்கிறார்கள். உலகம் முழுவதும்
ஆசியாவின் பண்பாடும் கலாச்சாரமும் அதிக அளவு பேரும் புகழும் பெற்று விளங்குகின்றன.
ஆனால், இத்தருணத்தில் பொருளியல்
வளர்ச்சி அடைந்த மேல்நாடுகளில் வலுவான பண்பாட்டுப் பிடிப்பின்மையால் இன்றைய
மேல்நாட்டு இளையோர்கள் கட்டுப்பாட்டையும்
மனவொழுக்கத்தையும் இழந்து பல ஏற்க
முடியாத பழக்க வழக்கங்களையும் நடவடிக்கைகளையும் கையாண்டு வருகின்றனர். இத்தகைய
நவநாகரிகச் சூழ்நிலையில் நமது ஆழமான, வலுவான, உண்மையான,
நம்மை நல்வழிப்படுத்தும்
தமிழ்ப் பாரம்பரியப் பண்பாட்டினைக் கற்றுக்கொண்டு முறையாகப் பின்பற்றி வாழ்வது
அறிவுக் கூர்மையாகும் அல்லவா ?
சமுதாயத்தையே
பேணும் பண்பாடு
நம் சுயவளர்ச்சிக்கு மட்டும் உதவிக்கரம் நீட்டவில்லை இப்பாரம்பரியப்பண்பாடு.
சமுதாயவளர்ச்சிக்கும் சமுதாயத்தின் சாதனைகளுக்கும் உறுதுணையாக நிற்கின்றது. நமது
பண்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதால் விழாக்கள் மற்றும் பண்டிகைகளை எல்லாம்
கொண்டாடும் வேளையில் கண்களுக்குத் தென்படாத ஒரு சிறப்பு நிலவுகிறது. அதுவே
ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதற்கு வழியமைக்கிறது. ஒரு விழாவில் கலந்து கொள்ளும்
சமயத்தில் அவ்விழாவிற்கு வருகை புரியும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன்
இன்முகத்துடன் கலந்துறவாடுகின்றபோது அவ்வினத்தைச் சார்ந்தவர்களிடையே சமூக
நல்லிணக்கத்தை ஏற்படுத்த பெரிதும் துணைபுரிகின்றது. அதனால்,
நமக்குத் தரப்படும் தமிழர் என்ற அடையாளம்
காக்கப்படுகின்றது. இந்தியர்களுக்கென தனிப்பட்ட பண்பாட்டினைப்
பின்பற்றும்போது நமது அடையாளத்தைத் தொலைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கா. அது மட்டுமின்றி
இப்பண்பாடுகளை ஒட்டிவரும் விழாக்களில் உறவினர்களைக் கண்டு உரையாடும் தருணத்தில்
தாய்மொழியில் உரையாட அதிக வாய்ப்பு உள்ளது. பண்பாட்டை உணர்ந்து உரையாடும்போது
அன்பு, பண்பு, சகிப்புத்தன்மை ஆகிய நற்குணங்கள்
போட்டிப்போட்டுக்கொண்டு வளரும். இத்தகைய பண்புகளைக் கொண்ட சமுதாயம்தான் ஆலமரம்போல் தழைக்கும்.
இந்தியப் பண்பாட்டைப் பின்பற்றும் இந்தியர்களும் தமிழர்களும் உலகச்
சமுதாயத்தின் பாராட்டைப் பெற்று இருப்பது ஊரறிந்த உண்மை. பெரியோரையும், முதியோரையும் போற்றிப் பேணுவது, `தாய் தந்தைப்பேண் `என்ற கொள்கையுடன் வாழ்வது ஆகியவை இன்று உலகைத் தமிழர் பக்கம் திரும்பிப் பார்க்க
வைத்துள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பணக்கார
நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் 15,000 முதியவர்கள்
இறந்தனர். இதில் 10,000க்கும் மேற்பட்டோர் அனாதைப் பிணங்களாகச்
செத்துக்கிடந்தனர். இவர்களை அடக்கம் செய்யக்கூட உறவினர்கள் இல்லை. இதற்குக் காரணம்
என்ன? தனிக்குடும்ப நடத்தை,
``நாளொரு வண்ணம் பொழுதொரு
செயல்` என்ற வாழ்க்கை
மட்டுமல்லாது, குடும்ப உறவு
முறை சரியில்லாத நிலையிலும் நிகழ்ந்தவைதான் இவை. ஆனால், பலர் தன் தரப்பு வாதங்களை இதற்கு நேர்மாறாக
வைக்கின்றனர். ஆனால், குடும்ப உறவை
வளர்க்கும் நம் இந்திய தமிழ்ப்பண்பாட்டு முறையைக் கையாண்டால் மேற்கண்ட
அனாதைப்பிணம் என்ற அவலநிலை ஏற்படாது. நமது தமிழ்ப்பண்பாட்டில் முதியோரைப்பேணுதலும்,
இறந்தோருக்குச் செய்யும்
ஈமச்சடங்குகளும், இறந்ததற்குப்
பிறகும் பல ஆண்டுகள் செய்திடும் காரியங்களும் உலகோர் போற்றும் நற்செயல்களாகும்.
இத்தகைய ஈமச்சடங்குகள் கூடச் சமூக உறவை வளர்க்கின்றது; குடும்பப்
பந்தத்தைக் கட்டிக்காக்கின்றது.
காசி.வீராசாமி
விக்டோரியா தொடக்கக்கல்லூரி
கடல்நீர் இனிக்கிறது!
- பா. கேசவன்
இளங்கோ மற்றும் மாறன் பள்ளிக்குப் போகிறார்கள்.
வேலன் மற்றும் பாலன் நண்பர்கள்.
இராவணன் மற்றும் கும்பகர்ணன் சகோதரர்கள்.
மாதவி இசை மற்றும் நடனம் பயின்றாள்.
யானை மற்றும் குதிரை வந்தன.
இவற்றைக்
கேட்டதும் என்ன எண்ணுகிறீர்கள்? ஏதோ ஒரு புதிய
மொழிபோல் தோன்றுகிறதா? அல்லது
வேடிக்கையாக இருக்கிறதா? “சே! சே! இது என்ன தமிழா?” என்று செவியைப் பொத்திக்கொள்கிறீர்களா?
ஆம், தமிழ்ச் செவி இவற்றை ஏற்காது. ‘தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்’ என்ற தமிழ் நெஞ்சம் இத்தகைய தொடர்களைக் கண்டு கொதித்தெழும்.
ஆனால், தமிழ் செய்த பாவமோ அல்லது தமிழன் செய்த பாவமோ இப்படிப்பட்ட
தொடர்களைக் கேட்டும் படித்தும் தொலைக்க வேண்டியிருக்கிறது. தமிழும் ஆங்கிலமும் ‘கற்றுத் துறைபோகிய
மேதாவி’களின் ‘நற்பணி’யே இத்தகைய மொழிக் கொலைக்குக் காரணம். ஆங்கிலத்திலே இவர்கள் இப்படிப் பிழையாக எழுதுவரோ? எழுதமாட்டார்கள். பிழை நேரக் கூடாதே என்பதில் மிகமிகக் கவனமாக இருப்பார்கள்.
“ஆங்கில நினைவு தோன்றும்போது எழும் மொழி வனப்பு, தமிழ் நினைவு தோன்றும்போது ஏன் எழுவதில்லை? ‘தமிழ்த்தாயை
எவ்வாறாவது குலைக்கலாம்; ஆங்கிலத் தாயை ஓம்பினால் போதும்’ என்னும் எண்ணம் இந்நாட்டவர்க்கு
உதித்திருக்கிறது போலும்! ஈன்ற தாய் பட்டினி! மற்றத் தாய்க்கு நல்லுணவு! என்னே காலத்தின் கோலம்!” (திரு. வி.க.)
ஏறத்தாழ ஐம்பது
ஆண்டுகளுக்கு முன் தமிழ்த் தென்றல் திரு. வி.க. கூறியது இன்றும் பொருந்துவதைக் காணும்போது தமிழின்
நிலையையும் தமிழரின் நிலையையும் என்னென்று உரைப்பது!
கட்டுரையின்
தொடக்கத்தில் குறிப்பிட்ட தொடர்களைப் பிழை நீக்கி முறையாக அமைக்கும்போது அவை
பின்வருமாறு அமையும்:
இளங்கோவும் மாறனும் பள்ளிக்குப் போகிறார்கள்.
வேலனும் பாலனும் நண்பர்கள்.
இராவணனும் கும்பகர்ணனும் சகோதரர்கள்.
மாதவி இசையும் நடனமும் பயின்றாள்.
யானையும் குதிரையும் வந்தன.
இப்படி அமைவதே
தமிழ் மரபு; தமிழ் இலக்கண நெறி; தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே இருந்துவரும்
வழக்கு.
“இருக்கின்ற இடத்தைவிட்டு
இல்லாத இடந்தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே! அவர்
ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே!”
என்ற பாடல்தான், தமிழ் மரபுக்கு
ஒவ்வாத தொடர்களை வலிந்து திணித்துத் தமிழுக்கு ஊறு விளைவிக்கும் ‘மேதை’களை எண்ணும்போது
நம் நினைவுக்கு வருகிறது. தொடக்கத்தில்
குறிப்பிடப்பட்டவை போன்ற தொடர்களை நல்ல தமிழறிஞர் எழுத்துக்களில் எங்கும் காண
முடியாது. அதாவது ‘எண்ணும்மை’க்குப் பதிலாக ‘மற்றும்’ என்னும் சொல்லை
வைப்பதைக் காண முடியாது.
‘எண்ணும்மை’க்குப் பதிலாக ‘மற்றும்’ என்னும் சொல்லைப்
பயன்படுத்துவோர், ஆங்கிலத்தில்
உள்ள ‘and’ என்னும் சொல்லுக்கு ஈடாக ‘மற்றும்’ என்னும் சொல்லை வழங்குகிறோம் என்னும்
விந்தையான விளக்கத்தையும் தருகிறார்கள். ஆங்கிலத்தில் ‘and’ என்னும் சொல்
வரும் இடங்களில் எல்லாம் தமிழில் எப்படி இருக்கும் என்பதைக் கீழ்வரும் தொடர்களைத்
தமிழாக்கம் செய்து பார்த்தாலே புரிந்துகொள்ளலாம்.
Work
hard and you will pass the examination;
For hours and hours;
Better and Better
We knocked and knocked
இந்தத் தொடர்களைத் தமிழாக்கும்போது, ‘and’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாக ‘மற்றும்’ என்னும் சொல்லை
அமைத்தால், அது வியப்புக்குரியதாக மட்டுமன்று; பொருளும் விபரீதமாகிவிடும்.
“பறவைகள் பல விதம் அவை
ஒவ்வொன்றும் ஒரு விதம்”
என்பது போல, ஒவ்வொரு மொழியும்
ஒவ்வொரு விதம். அதாவது ஒவ்வொரு
மொழியும் தனித்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு
மொழிக்கும் தனிமரபு உண்டு. அந்தத்
தனித்தன்மையும் மரபும் போற்றிக் காக்கப்படும்போதுதான் மொழியின் இனிமையும்
செம்மையும் குலையாதிருக்கும்.
‘மாறன் மற்றும் இளங்கோ பள்ளிக்குப் போகிறார்கள்’ என்பது போன்ற வாக்கியங்கள் பிழையெனக் கண்டோம். வேறு சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், இரட்டிப்புப் பிழை செய்கிறார்கள். அவர்கள் ‘மற்றும்’, ‘ஆகிய’ என்னும் இரு
சொற்களையும் வாக்கியத்திலே அமைத்து, “மாறன் மற்றும் இளங்கோ ஆகியோர் பள்ளிக்குப் போகிறார்கள்’ என்று எழுதுகின்றனர். தமிழ் இலக்கண மரபு அறிந்து எழுதினால் இத்தகைய பிழைகள்
நேருமா? பாமரர் பேச்சில்கூட இத்தகைய பிழைகளைக் காணமுடியாதே! அவர்களுக்குத் தெரிந்த தமிழ்மொழி மரபு, படித்தவர்களுக்குத் தெரியாமற்போனது வியப்புக்குரியதன்றோ? நல்ல தமிழறிஞர்கள் நூல்களைப் படித்தால் தமிழ் மரபு
தெரியும். இத்தகைய பிழைகளும்
ஒழியும். அறிஞர் அண்ணாவின்
கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். மரபு வழுவாத் தமிழுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு இது:
“பேராசிரியர் சேது(ப்பிள்ளை) அவர்கள், தமிழின் ஒலி மாட்சி குறித்து அழகுறப் பேசியிருக்கிறார்.
தமிழ்மொழிக்கே அணியாக விளங்கிடும் ‘ழ’கரம் ‘ற’கரம் குறித்து
எடுத்துக்கூறி. ‘ழ’ அளிக்கும் ஒலியின் இனிமையை எடுத்தியம்பி, இத்தகைய ஒலி மாட்சியை, பிறமொழிகள்
பெற்றிராத ஒலிமாட்சியை, நந்தம் மக்கள், உணர்ந்து உவகை கொள்ளாதிருத்தல்
குறித்தும், அதன் உயர்வறியாது அதனைப்
பாழ்படுத்திடும் போக்கினைக் கண்டித்தும் பேசியுள்ளார்.
எழுந்திரு – ஏந்திரு என்றாகிவிட்டதையும்,
திருவிழா – திருவிஷா என்று கெடுவதையும்,
பழம் – பளம் ஆகிப் பாழ்படுவதையும்,
கிழவி, கியவி ஆகி ‘ழ’கரம்
கேலியாக்கப்படுவதையும், எடுத்துக்காட்டி, நமது தாய்மொழிக்கே அழகளிக்கும் ‘ழ’கரம் இங்ஙனம்
பாழ்படுத்தப்படுகிறதே, கொச்சை பேசி
மொழியினைக் கொலை செய்கிறார்களே என்று கூறிக் கசிந்துருகி நிற்கிறார்.
‘ற’கரம் மற்றோர் அணி! இதனையும் பாழ்படுத்துகின்றனர் உரையாடலில்!
‘ற’கரம், வன்மையான உணர்ச்சியைக் காட்டிடும் ஒலிக்குறி! இதனை உணராமல், ‘ற’வை
படாதபாடுபடுத்துகிறார்களே நம்மனோர். காற்று, காத்தாகி
விடுகிறது! நாற்று, நாத்தாகிறது! ஐயகோ! அம்மவோ! சிலம்பளித்த
செல்வர்,
‘அறிவு அறைபோகிய பொறி அறுநெஞ்சத்து
இறை முறை
பிழைத்தோன் வாயிலோயே!’
என்று கண்ணகி
கூறுவதாகச் செப்புகிறாரே, ஆறு ‘ற’கரம் ஒலிக்கிறது
கேண்மின் என்று எடுத்துக் காட்டுகிறார்.
மற்றும் பலகூறி, பேராசிரியர் மொழிவளம் பாழ்படுவது குறித்துக்
கவலைப்படுகிறார்.
‘ழ’கர்ம் – ‘ற’கரம் பாழ்படுகிறது!
‘ழ’ தமிழ்மொழிக்கே
தனிச்சிறப்பளிக்கும் அழகணி! இதனை
அறியாதிருக்கும் தமிழர் தமிழழிப்போராகின்றனர்.
அவர்தம் போக்குக் கண்டு, மொழியின்
சுவையினைப் பருகிடும் பேராசிரியர், கொதித்தெழுவதும், ஆகுமோ இந்தப் போக்கு எனக் கடாவுவதும் ‘ழ’கரத்தின்
அருமையினைக் கூறுவேன் கேண்மின், என்று அறைவதும்
முறையே குறை கூறுகின்றேனில்லை! அவர் ஆறு ‘ற’கரம் ஒலித்திடும்
சிலப்பதிகார அடிகளை நினைவுபடுத்தும்போது, உண்மையிலேயே, அந்த ‘ற’கரங்கள், தமிழ்மொழியின்
ஒலிமாட்சியையும், பத்தினிப்
பெண்ணின் உள்ளத்தை ஆட்சி செய்த வீர
உணர்ச்சியையும் ஒருசேர எடுத்துக்காட்டத்தான் காண்கிறோம். மறுப்பாரில்லை! அத்தகைய
மாண்புமிகு மொழிக்கு நாம் உடையோம் என்றெண்ணிப் பெருமிதம் கொள்ளாமலில்லை!
மங்கை நல்லாளிடம் காணும் ஒயிலும், மயிலிடம் காணும் சாயலும், மொழியிடம் காணப்பெறும் ஒலி அழகுக்கு ஈடாகாதுதான்! அந்த ஒலி அழகு, கொச்சை பேசுவதால், செத்தொழிகிறது என்பது கண்டு கண்ணீர் வடித்திடத் தக்கதோர்
நிலைதான் ஐயமில்லை! ஆனால்,…!
‘ஒளி’யும் மல்கி
மறைந்துகொண்டிருக்கிறது!
ஒலிகெட்டும்
ஒளிமங்கியும் இருத்தல் மட்டுமல்ல, மொழியே
கீழ்நிலைக்கு, தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக்
கிடக்கிறது.
பாவலரும்
காவலரும் போற்றி வளர்த்த மொழி, அரச அவையிலும் ஆடலரங்கிலும், புலவர் மன்றத்திலும் பூங்காவிலும், கடலின் மீதும், குன்றின் மீதும் களிறு ஏறுவோனும், காற்றை அடக்குவோனும், எங்கும் எவரும் பேசி மகிழ்ந்த மொழி, இன்று, எல்லாத் துறைகளிலும், பேராசிரியர் பெருங்கவலை கொள்வது போல, ஒலிமாட்சி இழந்து மட்டுமல்ல, நிலை இழந்து நிற்கிறதே! கேட்பார் யார்? எங்குளர்? மொழியின் வளம் பேசி மகிழ்வோர் உளர்! ஒலி அழகுகாட்டி உவகை ஊட்டுவோர் உளர்! மொழியின் நிலை? அந்நிலைக்கு வந்துள்ள கேடு, அக்கோட்டினை மூட்டிடும் கெடுமதி கொண்டோர்! அவர்தம் அடிதொட்டு ஏற்றம் பெற எண்ணும் முதுகெலும்பற்றோர்! இவை குறித்து எடுத்தியம்ப யார் உளர்?” (அறிஞர் அண்ணா).”
இந்தக் கட்டுரையிலே எத்தனையோ இடங்களில் எண்ணும்மை
வந்திருக்கிறது. எங்கேனும், ஓரிடத்திடத்திலாவது எண்ணும்மைக்குப் பதிலாக ‘மற்றும்’ என்னும் சொல்லை
அண்ணா பயன்படுத்தியிருக்கிறாரா? இல்லையே! ஏன்? அவர்
தமிழறிந்தவர்; தமிழ் மரபு அறிந்தவர்; அது மட்டுமன்று; ஆங்கிலமும்
தமிழ்மொழியும் நன்கறிந்தவர். நம் மொழி மரபைக்
கட்டிக் காத்துத் தமிழ்மொழியை வளர்க்க வேண்டும் என்பதிலே அளவற்ற ஆர்வமும்
அக்கறையும் கொண்டிருந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, அண்ணாவின் எழுத்திலே, தமிழ் மரபு
பொன்னெனப் போற்றிக் காக்கப்படுகிறது. நல்லதமிழ் எழுத
நமக்கு உற்ற துணையாக அமைபவை தமிழ் மரபு உணர்ந்த இத்தகைய அறிஞர் பெருமக்களின்
எழுத்துகளே!
சற்று முன்பு நாம்
எடுத்துக் காட்டிய காட்டுரையின் இறுதுயிலே, “இவை குறித்து எடுத்தியம்ப யார் உளார்?” என்று அண்ணா கேட்கிறார். இது 1955-இலே அறிஞர் அண்ணா
எழுப்பிய கேள்வி. இன்றும் அதே
கேள்வியைக் கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இது வெட்கத்திற்கும் வேதனைக்கும் உரிய நிலையல்லவா? இதைப் போக்கித் தமிழன்னைக்கு வலிவும் வனப்பும் ஊட்டி, அவள் தலை நிமிர்ந்து நிற்கச் செய்வது நம் கடமையன்றோ?
தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு போன்ற துறைகளில் பங்கம் விளைவித்து, அதன்வழி, தமிழை ஊனப்படுத்த
நினைப்போர் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு
பெரிய இடத்தில் இருந்தாலும், அவர்களின்
மோசடிகளைக் கூர்மழுங்கச் செய்து, தமிழைக் காக்க
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொண்ட தமிழறிஞர்களும் தமிழாசிரியர்களும் முன்வர
வேண்டும். அப்போதுதான்
தமிழன் தன் தாய்மொழியின் சிறப்பை அறிந்து தலைநிமிர்ந்து நிற்க முடியும்.
நாம் எடுத்துக்காட்டிய கட்டுரையில் வேறோரிடத்தில் அறிஞர்
அண்ணா குறிப்பிட்டிருக்கும் இன்னொரு செய்தி, இன்றைய தமிழனின்
நிலைக்கும் அப்படியே பொருந்துகிறது.
“படித்திருப்பாயே தம்பி, பம்பாயில் பத்து நாளைக்கு முன்பு, ஒரு புனித விழாவன்று கடல்நீர் இனிக்கிறது
என்று ஒரு புரளி கட்டிவிடப்பட்டதாமே. அந்தச் செய்தியை, எவனோ ஓர் எத்தன், தனக்குக் கிடைத்த ஏமாளியிடம் கூறி வைத்திருக்கிறான். கடல்நீர் இன்று மட்டும் இனிக்கும் என்று. அவ்வளவுதான். சாரை சாரையாக மக்கள் கடலை நோக்கிச் சென்று, நான் முந்தி நீ முந்தி என்று
விழுந்தடித்துக்கொண்டு சென்று, கடல்நீர் பருகினராம்.
கடல்நீர்
கரித்தது! முகம் சுளித்தது! குமட்டலும் வந்தது! எனினும் என் செய்வர்! கடல்நீர் இனிக்கும் என்றல்லவா கூறி
இருக்கிறார்கள். எனவே, கடல்நீர் கரிக்கிறது, இனிக்கவில்லை என்று கூறினால், பாபாத்மாவுக்கு அப்படித்தான்! புண்யாத்துமாவுக்குத்தான் இனிக்கும் என்று
கூறிவிடுவரே என்று எண்ணி, ஏதும் கூறாமலே இருந்துவிட்டனர் பெரும்பாலோர். துணிந்து சிலர் கூறினர், கடல்நீர் எப்போதும் போல கரிக்கத்தான்
செய்கிறது; இனிக்கும் என்று சொன்னது வெறும் புரளி என்று! ஆம்! – என்றுகூடப் பக்தர்கள் கூறவில்லையாம் – முகம் ஆம் என்றதாம்!” (தம்பிக்குக் கடிதம்)
‘கடல்நீர் இனிக்கிறது’ என்பதை மறுத்துக்
கூற இயலாமல், பரிதவிக்கிறவர்கள் பலர். “கடல்நீர் இனிக்கவில்லை கரிக்கிறது” என்று துணிந்து கூறியவர்கள் சிலர். தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் இன்றும் அதே நிலைதான். நடுநிலை நின்று உண்மையைக் காணும் ஆற்றலும் உணர்ந்த உண்மையை
எடுத்தியம்பும் துணிவும் நமக்கு வரவேண்டும். அத்தகைய துணிவுடையோர் சிலராக இருப்பதால் பயனில்லை; அவர்கள் பலராக வேண்டும்! அப்போதுதான தமிழின் நிலைஉயரும்! தமிழனின் நிலையும்உயரும்!
*இக்கட்டுரையாசிரியர் தாம் எழுதிய ‘இனிய தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம்’ என்னும் நூலுக்காக, மொழிப்புலத்திற்குரிய தமிழக அரசின் முதல்பரிசு (2005), அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது (2006) ஆகியவற்றைப் பெற்றவர் என்பது பெருமைக்குரிய
செய்தியாகும்.
அருமையான கட்டுரையினை இங்குப் பதிவு செய்தமைக்கு என் பாராட்டுகள். மொழியின் வளர்ச்சிநிலை என்று கூறி மரபைப் பாழ்படுத்தும் செயலில் 'மொழி மேதைகள்' சிலர் இறங்கியுள்ளனர். நல்ல தமிழ் பயின்றோர் இதை ஒருநாளும் ஒப்பமாட்டார். அத்தகையோரை ஆசிரியர் கடிந்துகொள்வதில் தவறில்லை. on கடல்நீர் இனிக்கிறது!
ReplyDeleteபாராட்டுக்கு மிக்க நன்றி தம்பி. கட்டுரையாசிரியரிடம் தெரிவிப்பேன். தொடர்ந்து கட்டுரை எழுதுமாறு அவரிடம் கேட்டுள்ளேன். தவறாமல் படித்து வாருங்கள்.
ReplyDelete